திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி கிராமம் அருகேயுள்ள வரகூர் பகுதியினை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் திமுக கட்சியின் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, வழக்கம் போல் மணிகண்டன் நேற்று(நவ.,4) தனது பணியினை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு அந்த கும்பல் மணிகண்டனை வழிமறித்து ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். வெட்டுப்பட்ட மணிகண்டன் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். அதன் பின் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்.
கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தகவலறிந்து எருமைப்பட்டி காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனை செய்ய நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளதாக தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா? ரியல் எஸ்டேட் பிரெச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்னும் கோணத்தில் காவல்துறை தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர். முன்னதாக மணிகண்டன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தநிலையில் அண்மையில் இவர் திமுக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.