டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்
வட இந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால், வீடுகள் மற்றும் சந்தைகளுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். யமுனை ஆற்றங்கரையில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், அவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பருவமழை சீற்றத்தால் ஏற்படும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது என்று அவர் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய டெல்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இன்று காலை 11 மணியளவில், டெல்லியின் பழைய ரயில்வே பாலம் அருகே யமுனையின் நீர்மட்டம் 207.38 மீட்டராக இருந்தது. இது 2013ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் நீர்மட்டத்தை(207.32 மீட்டர்) விட அதிகமாகும். கடைசியாக 1978ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது யமுனையின் நீர்மட்டம் 207.49 மீட்டராக இருந்தது. அதற்கு பிறகு, இன்று தான் வரலாறு காணாத அளவு யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்றும் இன்றைக்குள் அது 207.57 மீட்டரை எட்டும் என்றும் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால், பழைய டெல்லியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.