காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு
பாரத் ஜோடோ நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை கவுகாத்தி நகருக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் அரசாங்கம், நகரத்திற்குள் வராமல், அதற்குப் பதிலாக கவுகாத்தி பைபாஸைப் பயன்படுத்துமாறு ராகுல் காந்திக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த மோதல் ஏற்பட்டது. நகருக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், காங்கிரஸ் தொண்டர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த தள்ளுமுள்ளு நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவு
இந்த யாத்திரைக்காக மத்திய கவுகாத்தி வழியாக செல்ல காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் போக்குவரத்து இடையூறுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு கவலைகள் ஆகியவற்றை காரணம் காட்டி அசாம் அரசாங்கம் ராகுல் காந்தியின் யாத்திரையை கவுகாத்தி பைபாஸ் வழியாக செல்ல கேட்டு கொண்டது. மேலும், யாத்திரை நகருக்குள் நுழைவதை தடுக்க நகரின் நுழைவாயிலான கானாபரா கிராசிங்கில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன் பிறகு, கானாபரா கிராசிங்கிக்கு காங்கிரஸ் தொண்டர்களையும் ராகுல் காந்தியையும் போலீஸார் தடுத்து நிறுத்தவே இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில், தொண்டர்கள் கூட்டத்தை தூண்டி மோதலில் ஈடுபட வைத்தாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.