Page Loader
சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல் 

சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Jun 05, 2024
12:43 pm

செய்தி முன்னோட்டம்

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மிக சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பெரும்பான்மையை எட்டாததால், சந்திரபாபு நாயுடுவின் டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு ஆகியவை கிங் மேக்கர்களாக மாறியுள்ளன. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கூட்டணி கட்சிகள் தான் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில், சந்திரபாபு பாஜக கூட்டணியிலேயே நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. NDA கூட்டணியிலேயே தொடர்ந்து இருப்பதற்கு சந்திரபாபு நாயுடு உறுதி பூண்டுள்ளளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா 

NDAவுக்கு ஆதரவாக பேசிய சந்திரபாபு நாயுடு

டெல்லியில் இன்று நடைபெறும் உயர்மட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் சந்திரபாபு நாயுடு, சபாநாயகர் பதவிக்கான தனது கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே டிவியின் வட்டாரங்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளன. எனினும், நேற்று இண்டியா கூட்டணி கட்சி தலைவரான சரத் பவார், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடதக்கது. டெல்லிக்கு செல்வதற்கு முன்னதாக, விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்களிடம், "நான் அனுபவம் வாய்ந்தவன். இந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்திற்கு செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.