இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள்
நேற்று: சட்டவிரோதமான பணபரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறையினரால், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். 18 மணிநேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, நெஞ்சுவலி ஏற்படவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பைபாஸ் சர்ஜெரி செய்யவேண்டும் எனவும் கூறினார்கள். இந்நிலையில், அவரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் இருமுறை மருத்துவமனைக்கு விரைந்தார். மறுபுறம், செந்தில் பாலாஜியின் மனைவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தொடுத்தார். நேற்று மாலை, அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டது.
இன்றும் தொடரும் திருப்பங்கள்!
நீதிமன்ற காவலுக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இன்று காலை வெளியான மருத்துவ அறிக்கையின்படி, அமைச்சர் சுயநினைவுடன் இருப்பதாகவும், இருதயத்தில் 90% அடைப்பு இருப்பதால் விரைவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டது. நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி இருப்பதால், அமைச்சர்கள் யாரையும், அவரை சந்திக்க அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும், மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கும் பொருட்டு அனுமதிக்கப்படுகின்றனர். இவரின் கைதில், மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. இதற்காக, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் நேரில் விசாரித்தார். இந்த வழக்கில் தொடர்ந்து பல திருப்பங்கள் நடைபெறுகிறது.