தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 64.22லட்சம் பேர் அரசு பணிக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த அக்டோபர் மாதத்தின் நிலவரப்படி 64 லட்சத்து 22 ஆயிரத்து 131 பேர் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஆண்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேரும், பெண்களில் 34 லட்சத்து 41 ஆயிரத்து 766 பேரும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தோர் 294 பேரும் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, வயது வாரியாக பிரித்து பார்க்கையில் 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகம் அரசு பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.
18 வயதுக்கு கீழுள்ள 16 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேர் விண்ணப்பம்
அதன்படி 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 27 லட்சத்து 72 ஆயிரத்து 34 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். 31 வயதுக்கு மேல் 45 வரையுள்ள 17 லட்சத்து 91 ஆயிரத்து 431 பேரும், 46 முதல் 60 வயது வரையுள்ள 2 லட்சத்து 47 ஆயிரத்து 847 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுள் 98 ஆயிரத்து 763 ஆண்களும், 10 ஆயிரத்து 650 பெண்களும் விண்ணப்பித்துள்ளனர்.