மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். அந்த தனியார் பேருந்தில் 35 பயணிகள் பயணம் செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விரைவுச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து கண்டெய்னரின் பின்பகுதியை பலமாக மோதியது. இதனால் ஐந்து ஆண்கள், ஆறு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் ட்விட்டரில் கூறியுள்ளார்.