ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ரஜினி ஹாஷ்டேக்; காரணம் என்ன?
எக்ஸ் தளத்தில்,(முன்னதாக ) நேற்று முழுவதும் ரஜினிகாந்த் பற்றி ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி இருந்தது. அதற்கு காரணம் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். ரஜினிகாந்த்-ரம்பா-சௌந்தர்யா ஆகியோர் நடித்து, சுந்தர்.சி இயக்கியிருந்த திரைப்படம் 'அருணாச்சலம்'. '90களில் வெளியான மிகப்பெரிய சூப்பர்ஹிட் திரைப்படம். தற்போது 'மீ-டூ' விவகாரத்தை பற்றி அப்போதைய நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருவதோடு, தங்கள் சினிமா வாழ்க்கையில், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், நடிகை ரம்பா சமீபத்திய ஒரு பேட்டியில் அருணாச்சலம் படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் தன்னை முதுகில் அடித்ததாகவும், தான் அழுததாகவும் ஒரு வீடியோ கிளிப் வைரலானதை அடுத்துதான், ரஜினியை அவதூறாக கூறும் ஒரு ஹாஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆனது.
உண்மையில் நடந்தது என்ன?
சினிஉலகம் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அருணாச்சலம் படப்பிடிப்புத்தளத்தில் நடந்த வேடிக்கை நிகழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். ஒருநாள் படப்பிடிப்பு தளத்திற்கு பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் வருகை தந்திருந்தனர். அவர்களை கண்டதும் ஓடி சென்று ரம்பா, கட்டி அணைத்து, வாழ்த்து கூறி, சிறிது பேசி கொண்டிருந்தாராம். அவர்கள் சென்ற பிறகு, படப்பிடிப்பு தளத்தில் ஒரே சலசலப்பாக இருந்ததாம். ரம்பா ஒரு ஓரமாக அமர்ந்து, என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது ரஜினி கோபமாக கழுத்தில் இருந்த துண்டை உதறிவிட்டு, ரம்பாவை முறைத்து பார்த்து விட்டு கேரவனுக்கு சென்று விட்டாராம். ரம்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லையாம்.
பிராங்க் செய்த ரஜினி
ரம்பாவின் அசிஸ்டன்ட் மற்றும் ரம்பாவின் தாயாரும்,"உங்களால் தான் ரஜினி சார் கோபமாக இருக்கிறார். உங்களுடன் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டார். என்ன செய்தீர்கள்?"எனக்கேட்க, ரம்பா,"நான் ஒன்றுமே செய்யவில்லை" என அழுதுவிட்டாராம். உடனே ஓடி வந்த ரஜினி,"யாருய்யா குழந்தையா அழுக வெக்கிறது?" எனக்கூறி, படக்குழுவினரை வேடிக்கையாக அடிக்க சென்றாராம். அதன்பின்னர், ரஜினி, ரம்பாவிடம்," என்ன மேடம்? பாலிவுட் ஹீரோஸ் வந்த மட்டும் ஓடி சென்று, கட்டி அணைத்து, கலகலவென பேசுகிறீர்கள்? தமிழ் ஹீரோக்களை கண்டால் மட்டும், கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு, ஓரமாக உட்கார்ந்து கொள்கிறீர்கள். ஏன் எங்களிடம் சகஜமாக பேசமாடீர்களா? நாளை முதல், இந்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் லைட்மேன் முதல் இயக்குனர்வரை, சல்மான்கானிடம் எப்படி பழகினீர்களோ, அப்படிதான் சகஜமாக பேசவேண்டும்" எனக்கூறினாராம்.
வைரலாகும் கிளிப்
இந்த சூழலில், இந்த வீடியோவில் சில பகுதிகளை மட்டுமே வெட்டி எடுத்து, ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர் சில விஷமிகள். அதனாலேயே இணையத்தில் தற்போது வரை, ரஜினி பற்றிய ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், உண்மையில் நடந்து என்ன என மக்கள் குழம்பி வருகின்றனர். இது போன்ற சென்சிடிவ்வான விஷயத்தில், ஒரு தனி மனிதரை இழிவுபடுத்துவது தவறான விஷயம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.