இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்
மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார். இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக் கோப்பை தொடர், தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இப்போட்டியை பார்க்க மும்பை செல்ல, ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், மும்பைக்கு படப்பிடிப்புக்காக செல்கிறாரா என கேட்டனர். அதற்கு அவர் இந்தியா விளையாடும் அரையிறுதி போட்டியை பார்ப்பதற்காக செல்வதாக கூறினார். கடந்த செப்டம்பர் மாதத்தில் ரஜினிகாந்த்திற்கு, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பதற்கான, கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.