சிறுவனை அடித்த சர்ச்சை வீடியோ குறித்து நானா படேகர் விளக்கம்
வாரணாசியில் படப்பிடிப்பின் போது செல்பி எடுக்க முயன்ற சிறுவனை, நானா படேகர் தலையில் தாக்கிய வீடியோ வைரலான நிலையில், அது படத்தின் ஒரு பகுதி என நினைத்ததாக படேகர் விளக்கமளித்துள்ளார். படத்தில் அதேபோன்ற காட்சி உள்ளதாகவும், அதற்கு ஏற்கனவே ஒத்திகை பார்த்த நிலையில், வேறு காட்சி படமாக்கப்படும் போது சிறுவன் குறுக்கிட்டதால் தாக்கியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் ஒரு சிறுவனை அடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த காட்சி எங்கள் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு நாங்கள் ஒரு ஒத்திகையை நடத்தினோம்." "நாங்கள் இரண்டாவது ஒத்திகையை நடத்த திட்டமிட்டிருந்தோம். இயக்குனர் தொடங்க சொன்னார். வீடியோவில் உள்ள சிறுவன் உள்ளே வரும்போது நாங்கள் தொடங்கவிருந்தோம்."
சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார் நானா படேகர்
"அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை, அவர் எங்கள் குழுவில் ஒருவர் என்று நினைத்தேன், அதனால் நான் அவரைக் காட்சியின்படி அறைந்தேன்" "நான் அவரை வெளியேறச் சொன்னேன். பின்னர், அவர் படக்குழுவில் இல்லை என்பதை நான் அறிந்தேன். எனவே, நான் அவரை மீண்டும் அழைக்கப் முற்பட்டேன், ஆனால் அவர் ஓடிவிட்டார்." "அவரது நண்பர் வீடியோவை படம்பிடித்திருக்கலாம் என நினைக்கிறேன். நான் யாரிடமும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று கூறியதில்லை." "நான் இதை செய்யவில்லை. இது தவறுதலாக நடந்தது. ஏதேனும் தவறான புரிதல் இருந்தால் மன்னித்து விடுங்கள். நான் இப்படி எதுவும் செய்யமாட்டேன்" என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.