தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம்
நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், காவல் நிலையத்தில் இன்று ஆஜராக சமன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தொண்டையில் ஏற்பட்டுள்ள வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் காவல்துறையினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட தனக்கு, கடந்த 15 நாட்களாக இருமல் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று மிகவும் பாதிப்படைந்து, தொண்டை தொற்று(throat infection) ஆக மாறியதால், பேச மிகவும் சிரமப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சையிலிருந்து மீண்டு, நாளை காவல்துறையினர் கூறும் நேரத்திற்கு, ஆஜராக அனுமதிக்க வேண்டுமென,ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, அவர் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மன்சூர் அலிகான் தலைமறைவு?
மன்சூர் அலிகானுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சமன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷா குறித்த வழக்கில், மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் விளக்கம் அளிக்க இன்று காலை 10 மணிக்கு, அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சம்மன் வழங்கப்படும் போது, மன்சூர் அலிகான் வீட்டில் இல்லை. அவரது வீடு பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரது தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்பதால், தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது இதற்கிடையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.