இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்
இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி கிராமத்தில் பிறந்த மாரிமுத்து, தனது சொந்த ஊரில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலுடன், நெஞ்சுவலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மாரிமுத்து அளவுக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் எனவும், அதனாலேயே அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மாரிமுத்துவின் சினிமா பயணம்
கர்ணன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, மாமன்னன் திரைப்படத்தில் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த மாரிமுத்து, தற்போது தனியாக படம் இயக்க கதை தயார் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மாமன்னன் பட வெற்றி விழாவில், அமைச்சர் மற்றும் படத்தின் நாயகன் ஆன உதயநிதி ஸ்டாலினிடம், இவர் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த மாரிமுத்துவிற்கு, ஷீபா என்ற மனைவியும், சாமுவேல் என்ற 5 வயது மகனும் உள்ளனர். மேலும் மாரிமுத்துவின் மரணம் குறித்து, ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.