'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை தொடங்கி, உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சி நடத்த திட்டம் வைத்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத விதமாக மழை பெய்யவே, அந்த நிகழ்ச்சி, நேற்று, (செப்டம்பர்-10) ஒத்திவைக்கப்பட்டது. சென்னையின் ECR-ல் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பிளாட்டினம், டைமண்ட், கோல்ட் என பலவித டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விலை, ரூ.2000-ரூ.15000 வரை நிர்ணையிக்கப்பட்டிருந்தது. தனியார் தளத்தில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
ரசிகர்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கூட்டத்தை சமாளிக்க முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என கண்டங்கள் எழுந்தன. இதனால், டிக்கெட் இருந்தும், அமர இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அதோடு, அதிக கூட்டம் கூடியதால், டிக்கெட் வைத்திருந்த பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர் எனவும், ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி தங்களை ஏமாற்றிவிட்டதாக பலரும் முறையிடவே, தற்போது ரஹ்மான், "அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.