ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவை தொடர்ந்து,கத்ரீனா கைஃப்பின் டீப்ஃபேக் புகைப்படம் வைரல்
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சர்ச்சை அடங்குவதற்குள், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் டைகர் 3 திரைப்படத்தின் டீப்ஃபேக் காட்சி வைரலாகி உள்ளது. கத்ரீனாவின் உண்மையான புகைப்படத்தில் அவர் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞருடன், துண்டை அணிந்து கொண்டு சண்டையிடுகிறார். இப்போது வைரலாகும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில், கத்ரீனா துண்டுக்கு பதிலாக ஒரு நீளமான துணியை அவரும் மற்றொருவரும் பிடித்திருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி இந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. இதை கண்டறிந்த அவரது ரசிகர்கள், அவரின் டீப்ஃபேக் புகைப்படத்திற்கு தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
டீப்ஃபேக் காட்சிகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய அரசு எச்சரிக்கை
ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வைரலானதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இச்சம்பவத்தை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் மத்திய அரசு, ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண்களை இழிவு படுத்தி டீப்ஃபேக் படங்களை வெளியிட்டால், மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.மேலும், டீப்ஃபேக் சர்ச்சைக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ராஷ்மிகா மந்தனா, "இதுபோன்ற ஒன்று எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது" என தெரிவித்திருந்தார்.