Page Loader
'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் 21 ஆண்டுகள்- சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை

'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் 21 ஆண்டுகள்- சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை

எழுதியவர் Srinath r
Dec 13, 2023
02:02 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அமீர் இயக்குனராக அறிமுகமான மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் சூர்யா, லைலா, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை, அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் இன்றளவும் ப்ளே லிஸ்ட்களை ஆட்சிசெய்கிறது. 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி சூர்யாவின் சினிமா பயணத்தில் இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், 21 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இயக்குனர் அமீர் அறிக்கையை வெளியிட்டு நன்றி தெரிவித்து படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2nd card

"அவமானங்கள் அன்பளிப்பாக வந்த போதும் சோர்ந்து விடவில்லை"

"மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் "மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

3rd card

"சென்னையை நோக்கி வரும் அனைவரின் கனவும் நினைவாவதில்லை"

"சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை." "அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு.கணேஷ் ரகு மற்றும் திரு.வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த திரு.சூர்யா, செல்வி.திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் - நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி மற்றும் திரு.யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!"

4th card

பருத்திவீரன் சர்ச்சைக்கு பின், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த அமீர்

"என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக - பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக "மெளனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.! என்னாளும் அன்போடும், மாறாத நன்றியோடும், அமீர்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எழுந்த பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, சூர்யா மற்றும் அமீர் இடையே, பிளவை ஏற்படுத்தியது எனக் கூறப்பட்ட நிலையில், சூரியாவிற்கு அமீர் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.