
சன் டிவி உரிமை தகராறில் மாறன் குடும்பம்; அண்ணன் தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய கலாநிதி மாறன்
செய்தி முன்னோட்டம்
திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரரான கலாநிதி மாறன் மீது, 'சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளார்' எனவும், 2003 முதல் தொடர்ச்சியான மோசடி பரிவர்த்தனைகளை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டி, அவருக்கு சட்டபூர்வமான நோட்டீசை அனுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம், தமிழகத்தின் மிகச் செல்வாக்கு மிக்க அரசியல்-வணிகக் குடும்பங்களில் ஒன்றான மாறன் குடும்பத்தில் பல ஆண்டுகளாக நிலவி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட சொத்து தகராறு பொதுவெளிக்கு வந்துள்ளது.
மோசடி பரிவர்த்தனைகள்
2003 முதல் தொடர்ச்சியான 'மோசடி பரிவர்த்தனைகள்' என குற்றச்சாட்டு!
ஜூன் 10 தேதியிட்ட சட்ட அறிவிப்பில், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, நிதி ஆலோசகர்கள், கணக்காளர் மற்றும் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர், SUN TV நிறுவனத்தில் கட்டுப்பாட்டு பங்குகளை சட்டவிரோதமாக பெற்றதற்கான திட்டமிடப்பட்ட சூழ்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது போலி ஆவணங்கள், பங்கு ஒதுக்கீட்டில் மோசடி மற்றும் நிறுவன விதிமீறல்கள் மூலம் நடைபெற்ற மோசடி என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி மாறன்
முரசொலி மாறனின் உடல்நிலை மோசமான நிலையில், முக்கிய பங்குகள் மாற்றம் என குற்றச்சாட்டு
அன்று கோமா நிலையில் இருந்த தந்தை முரசொலி மாறனின் பெயரில் இருந்த பங்குகள், அவர் இறப்பதற்கு முன் மற்றும் பிறகும் உரிய வாரிசு ஆவணங்கள் இன்றி, கலாநிதிக்கு மாற்றப்பட்டுள்ளன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2003ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி, அப்போதைய சன் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், தலா ரூ.10 முகமதிப்பில், கலாநிதி தனக்கு 12 லட்சம் பங்குகளை ஒதுக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஒதுக்கீடு - நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பீடு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை இருந்தபோதும், அதன் இருப்பு மற்றும் உபரி ரூ.253 கோடியைத் தாண்டியபோதும் - செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பங்கு
ஒரே இரவில் மாறிய பங்குகள்
கலாநிதிக்கு ஒரே இரவில் 60% பங்குகளை வழங்கிய இந்தப் பங்கு வெளியீடு, அசல் விளம்பரதாரர்களான முரசொலி மாறன் மற்றும் மறைந்த எம். கருணாநிதியின் குடும்பங்களின் பங்குகளை தலா 50% இல் இருந்து 20% ஆகக் குறைத்ததாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பு மொத்த பரிவர்த்தனை ரூ.3,500 கோடிக்கு மேல் இருந்திருக்க வேண்டும் என்று நோட்டீஸ் மதிப்பிட்டுள்ளது.
ஆனால் கலாநிதி ரூ.1.2 கோடியை மட்டுமே செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்ட அறிவிப்பில், அந்த பரிவர்த்தனைகளிலிருந்து கிடைத்த வருமானம் சன் டைரக்ட் டிவி, ஸ்பைஸ்ஜெட், சன்ரைசர்ஸ் ஐபிஎல், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டது என்றும், அது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடக்கம்
தந்தை இறந்ததும் தாயார் வழியில் சொத்துக்கள் மாற்றம்
மேலும், முரசொலி மாறன் இறந்த மூன்று நாட்களுக்குப்பிறகு, அவரது இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அவரது பெயரில் இருந்த 95,000 பங்குகள் அவரது மனைவி மல்லிகா மாறனுக்கு சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது நிறுவனத்தின் சங்க விதிகளை மீறுவதாகும்.
இந்தப் பங்குகள் பின்னர் கலாநிதிக்கு மாற்றப்பட்டன என்று கூறப்படுகிறது.
இது தவிர குங்குமம் பப்ளிகேஷன்ஸ், குங்குமம் நிதியாகம் மற்றும் கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் போன்ற பிற குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இதேபோன்ற பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தும் SUN TV-இல் மொத்தம் 2.85 லட்சம் பங்குகளைக் கொண்டிருந்தன.
இந்தப் பங்குகளும் கலாநிதிக்கு ஒரு பங்குக்கு ரூ.10 என்ற விலையில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உரிமை
"என் உரிமைகள் பறிக்கப்பட்டன": தயாநிதி மாறன்
தயாநிதி மாறன், தந்தை முரசொலி மாறனின் சட்டபூர்வ வாரிசாக சன் டிவி நிறுவனத்தில் தனது உரிமையான பங்குகளை பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
2005-ல் கலாநிதிக்கு வழங்கப்பட்ட 6 கோடி போனஸ் பங்குகள் உட்பட அனைத்து உரிமைகளையும் அசல் பங்குதாரர்களுக்கு திருப்பித் தர வேண்டும் அறிவிப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதைப்பற்றி, தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (SFIO), SEBI, NSE, BSE, ROC, மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உள்ளிட்டவற்றிடம் முறையிடுவதாகக் கூறியுள்ளது.
மேலும், சன் குழுமத்தின் ஊடக உரிமைகள், விமான சேவைகள் மற்றும் IPL உரிமைகள் ஆகியவற்றை ரத்து செய்யும் நோக்கத்தையும் அதில் முன்மொழிந்துள்ளது.