ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை
கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் ஜனவரி 2024இல் மட்டுமே, இதுவரை 7500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு அறிக்கை காட்டுகிறது. சமீபத்திய தொடர்ச்சியான பணிநீக்கங்களுக்குப் பிறகு, அறிக்கை வெளியிட்ட கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆல்பாபெட் நிறுவனத்தில் "எளிமையாக்கும்" முயற்சியில், வரும் மாதங்களில் மேலும் பணி நீக்கங்கள் இருக்கும் என தனது ஊழியர்களை எச்சரித்துள்ளார் என்று தி வெர்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பணிநீக்கங்கள், நிறுவனத்தில் வேகத்தை அதிகரிக்கவும், பல துறைகளில் உள்ள உள்அடுக்குகளை அகற்றுவதில் கவனம் செலுத்தும் என்று சுந்தர் பிச்சை அந்த குறிப்பில் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
செலவுக் குறைப்பு நடவடிக்கை
கூகுள் நிறுவனம், அதன் வாய்ஸ் அஸ்சிஸ்ட்டன்ட் மற்றும் வன்பொருள் துறைகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. கூகுள் நெஸ்ட், பிக்சல், ஃபிட்பிட், விளம்பர விற்பனைக் குழு மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி குழு ஆகியவை இந்தப் பணிநீக்கங்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. ஜனவரி 2023இல், ஆல்பாபெட் அதன் உலகளாவிய பணியாளர்களில் 12,000 அதாவது 6% வேலைகளை குறைக்கும் திட்டங்களை அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் பணியாளர் கட்டமைப்பில் பாரிய மறுசீரமைப்புக்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனம் இந்த மறுசீரமைப்பின் போது, ஃபிட்பிட் இணை நிறுவனர்களான ஜேம்ஸ் பார்க் மற்றும் எரிக் ப்ரைட்மேன் ஆகியோரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.