
பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்; ஜூலை 1 முதல் புதிதாக அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
ஜூலை 1, 2025 முதல், குறிப்பிடத்தக்க நிதி மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இது வரி செலுத்துவோர் மற்றும் முன்னணி இந்திய வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகியவற்றின் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். இதன்படி. வரி இணக்கத்தை வலுப்படுத்த, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஜூலை 1 முதல் அனைத்து புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கும் ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை, பான் கார்டுக்கு விண்ணப்பிக்க செல்லுபடியாகும் ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போதுமானதாக இருந்த நிலையில், அது மாற்றப்பட்டு ஆதார் கட்டாய சரிபார்ப்பு நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை வரி நிர்வாகத்தை நெறிப்படுத்தவும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி
வருமான வரி ரிட்டர்ன் தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு
வரி செலுத்துவோருக்கு மற்றொரு நிவாரணமாக, CBDT மதிப்பீட்டு ஆண்டு 2025-26க்கான வருமான வரி ரிட்டர்ன் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. இது ஜூலை 31 என்ற முந்தைய காலக்கெடுவைத் தாண்டி கூடுதலாக 46 நாட்களை வழங்குகிறது. கடைசி நேர இடையூறுகளைத் தவிர்க்க முன்கூட்டியே தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த வரி மாற்றங்களுடன், இந்தியாவின் முன்னணி வங்கிகள் திருத்தப்பட்ட கட்டணங்களை அமல்படுத்துகின்றன. ஜூலை 15 முதல் ELITE மற்றும் PRIME போன்ற பிரீமியம் கார்டுகளுக்கான இலவச விமான விபத்து காப்பீட்டு சலுகைகளை SBI கார்டு நிறுத்துகிறது. ஜிஎஸ்டி, இஎம்ஐகள் மற்றும் கட்டணங்களை உள்ளடக்கிய கிரெடிட் கார்டுகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) கணக்கிடப்படும் விதத்தையும் இது மாற்றும்.
எச்டிஎஃப்சி
பரிவர்த்தனைகளை கட்டணம் விதிக்கும் எச்டிஎஃப்சி
எச்டிஎஃப்சி வங்கி இப்போது வாடகை செலுத்துதல்கள், ரூ.10,000க்கு மேல் வாலட் ரீலோட் செய்தல், ரூ.50,000க்கு மேல் பயன்பாட்டு பில்கள் மற்றும் ரூ.10,000க்கு மேல் கேமிங் செலவுகள் ஆகியவற்றில் 1% பரிவர்த்தனை கட்டணத்தை விதிக்க உள்ளது. இது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.4,999 வரை அதிகபட்சமாக விதிக்கப்படும். இதற்கிடையில், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள், ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் மற்றும் பணத்தை கையாள்வதற்கான கட்டணங்களை எதிர்கொள்வார்கள். புதிய விதிகள் அமலுக்கு வரும்போது மக்கள் இதை அறிந்துகொண்டு அதற்கேற்ப நிதியைத் திட்டமிடுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.