Page Loader
ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு ஒப்புதல்

ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2024
05:43 pm

செய்தி முன்னோட்டம்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் (இ-டிரைவ்) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் வரை ஒன்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஹைப்ரிட் & ஃபேம் திட்டத்திற்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதை இந்த புதிய முயற்சி விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலையான மற்றும் புதுமையான போக்குவரத்து தீர்வுகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் இந்த முடிவை அறிவித்தார். இ-டிரைவ் திட்டம் எலக்ட்ரிக் வாகன தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பு மற்றும் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

இ-டிரைவ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தத் திட்டம் 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், 3.16 லட்சம் இ-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 14,028 இ-பஸ்கள் ஆகியவற்றை ஆதரிக்கும். மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-ஆம்புலன்ஸ்கள், இ-டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க ரூ.3,679 கோடி மதிப்பிலான மானியங்கள் வழங்கப்பட உள்ளன. மாநில போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 இ-பஸ்களை கொள்முதல் செய்ய ரூ.4,391 கோடி வழங்கப்பட்டுள்ளது. இ-ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இ-டிரக்குகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 88,500 சார்ஜிங் தளங்களையும் ஆதரிக்கும்.