உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது IEA
சர்வதேச எரிசக்தி நிறுவனமானது(IEA), உலகளவில் ஆற்றல் பயன்படுத்தப்படும் விதம் குறித்த 'World Energy Outlook 2023' அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் உலகளவில் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் ஆற்றல் எவ்வளவு மாற்றம் கண்டிருக்கிறது என்பது குறித்த தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறது IEA. அதன்படி தற்போது உலகளவில் விற்பனை செய்யப்படும் ஐந்து கார்களில் ஒன்று எலெக்ட்ரிக் காராக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது IEA. இதுவே 2020ம் ஆண்டு 25 கார்களுக்கு ஒரு எலெக்ட்ரிக் காராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை விட 2030ம் ஆண்டு பத்து மடங்கு அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என கணித்திருக்கிறது IEA.
2030ம் ஆண்டிற்குள் உலகளவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு:
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, அந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆற்றல் மூலங்களும் புதுப்பிக்கத்தக ஆற்றல் மூலங்களாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டிருக்கிறது IEA. தற்போது சூரியஒளி மூலம் 6% மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது இந்தியா. இது 2030ம் ஆண்டு 18% ஆக உயரும் என கணித்திருக்கிறது IEA. 2030ம் ஆண்டுக்குள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் 45% எலெக்ட்ரிக் வாகனங்களாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் கார்களில் 65% எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் கணக்கிட்டிருக்கிறது IEA. மேலும், 2030ம் ஆண்டுற்குள் சீனாவில் 100 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயனாட்டிற்கு வரும் எனவும் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது சர்வதேச எரிசக்தி நிறுவனம்.