நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
திட்டம்
MIGA - ஈரானை மீட்டெடுக்கும் திட்டம்
தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் சரணடைந்த பிறகு அந்த நாட்டுக்கு ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரைத் தேர்வு செய்ய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உதவும் என்று கூறியுள்ளார். "ஈரானை மீண்டும் ஒரு பெரிய நாடாக்குவோம்" (MIGA) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அழிவின் விளிம்பில் இருக்கும் ஈரானின் பொருளாதாரத்தை முன்னெப்போதையும் விட வலிமையாக்குவோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளது.
போர்
உச்சக்கட்டப் போர் மற்றும் உயிரிழப்புகள்
கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், அந்த நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சிதைத்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இந்த மோதல்களில் 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்கம்
உலகளாவிய தாக்கம்
இந்த மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதோடு, உலகளாவிய எண்ணெய் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.