Page Loader
ராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு
ராஜினாமா செய்ய முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்

ராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2024
10:48 am

செய்தி முன்னோட்டம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதிலும், ராஜினாமா செய்யும் கோரிக்கையை நிராகரித்ததோடு, அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது விருப்பத்தை உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பு கடந்த புதன்கிழமை (அக்டோபர் 23) ஒரு நீண்ட கூட்டத்தைத் தொடர்ந்து 20 லிபரல் கட்சி எம்பிக்கள் தேர்தலுக்கு முன் அவர் ராஜினாமா செய்யக் கோரி கடிதத்தை அளித்த பிறகு வந்துள்ளது. இதுகுறித்து நடந்த கலந்துரையாடலில் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது கட்சி எம்பிக்களிடம் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் உள்ள 153 லிபரல் எம்பிக்களில் பெரும்பான்மை ஆதரவும் அவருக்கு உள்ளதால், அவர் தனது தலைமைப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.

அதிருப்தியாளர்கள்

ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவால் அதிருப்தியாளர்கள் ஏமாற்றம்

ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கடிதத்தில் கையெழுத்திட்ட எம்பிக்களில் ஒருவரான சீன் கேசி, ட்ரூடோவின் முடிவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பிரதம மந்திரி தனது போக்கைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொண்டார். "கவலைகளை வெளிப்படுத்துவதில் நான் எனது வேலையைச் செய்தேன். ஆனால் இப்போது எனது இடத்தை வெல்வதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது." என்று கேசி குறிப்பிட்டார். சிறப்புத் தேர்தல்களின் போது ரொறொன்ரோ மற்றும் மாண்ட்ரியலில் சமீபத்திய தோல்விகளுக்குப் பிறகு ட்ரூடோவின் தலைமை ஆய்வுக்கு உட்பட்டது. இதற்கிடையே, 2024 அக்டோபருக்குள் அடுத்த கூட்டாட்சித் தேர்தல் கனடாவில் நடைபெற வாய்ப்புண்டு எனக் கூறப்படும் நிலையில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவை விட மிகவும் பின்தங்கி இருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.