போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்று கான் யூனீஸ் மக்கள் கூறுகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே 7 நாட்கள் நீடித்த போர் நிறுத்தம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் மீது தீவிர தாக்குதலை தொடங்கியது. கான் யூனிஸ் பகுதியில் வசிக்கும் நான்கு குழந்தைகளின் தாயான சமீரா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "நாங்கள் இங்கு வந்ததிலிருந்து கடந்த ஆறு வாரங்களில் கான் யூனிஸில் நாங்கள் கழித்த மிக மோசமான இரவுகளில் இதுவும் ஒன்று. அவர்கள் கான் யூனிஸுக்குள் நுழைவார்கள் என்று நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
400 ஹமாஸ் இலக்குகளை தாக்கிய இஸ்ரேல்
போர் மீண்டும் தொடங்கியது முதல், ஹமாஸ் தொடர்பான 400 இலக்குகளை தாக்கியுள்ளதாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் மேல், ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில், 22 வயது வாலிபர் லேசான காயமடைந்தார். கான் யூனிஸ் மற்றும் எகிப்தின் எல்லை நகரமான ரஃபா நகரம், சமீபத்தில் அதிகப்படியான இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளானது. இஸ்ரேலின் அடுத்த கட்டத் தாக்குதலானது, தெற்கு காசாவை மையமாகக் கொண்டு நடத்தப்படும் என கூறப்படுகிறது. போரின் ஆரம்ப கட்டங்களில், இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்த காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்ட பின்னர், இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இப்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வியில் முடிந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார், கடந்த வெள்ளிக்கிழமை போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்து, போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்ததாக கூறி, நேற்று தனது பிரதிநிதிகளை கத்தாரிலிருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. பின்னர், ஹமாஸ் அதிகாரி ஒருவர் அல் ஜசீராவிடம் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தி, அனைத்து பாலஸ்தீன கைதிகளையும் ஒப்படைக்கும் வரை, மீண்டும் பேச்சு வார்த்தையை தொடரப்போவதில்லை என்றும் கூறினார்.
இரண்டு நாள் போரில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி
இந்நிலையில், போர் மீண்டும் தொடங்கியதற்கு பின்னர், இஸ்ரேலின் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதியில் நேற்று கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தற்போது வரை இப்போரில், 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 15,000க்கும் பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலிகளும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் 5 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாகவும், இஸ்ரேலின் வான் மற்றும் கப்பல் படைகள், ஹமாஸ் கட்டுப்பாட்டு மையங்களை தகர்த்ததாக அந்நாடு கூறுகிறது.