பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த கடத்தல் நாடகத்தில், பலூச் விடுதலை இராணுவத்தால் (BLA) இருபத்தொரு பயணிகளும், நான்கு துணை ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் எனவும், அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் அழித்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்கள் 60 பணயக்கைதிகளைக் கொன்றதாகக் கூறிய சிறிது நேரத்திலேயே இராணுவத்தின் அறிக்கை வந்தது.
முன்னதாக பலூச் பயங்கரவாதிகள் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் மேலும் பலரைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியது.
கடத்தல்
பயணிகள் ரயிலை கடத்திய பலூச் தீவிரவாதிகள்
செவ்வாய்க்கிழமை, சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒன்பது பெட்டிகளில் அடங்கிய ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், குவெட்டாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் வெடிபொருட்களால் குறிவைக்கப்பட்டு, தடம் புரண்டு, BLA-வால் கடத்தப்பட்டது.
ரயில் தாக்குதலைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் உட்பட பல முனை தாக்குதல் நடத்தியது.
மீட்கப்பட்ட நபர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அவர்களை கிளர்ச்சியாளர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உள்ளாடைகளை அணிந்த கிளர்ச்சியாளர்கள், பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து அருகில் உட்கார வைத்தனர், இதனால் மீட்பு நடவடிக்கை கடினமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரணம்
எதற்காக இந்த கிளர்ச்சி நடந்தது?
பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற வேண்டும் என்று வாதிடும் பல்வேறு எதிர்ப்புக் குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக புதிய தீவிரமான தாக்குதலை அறிவித்து, பலூச் தேசிய இராணுவம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக அமைந்துள்ள பலூசிஸ்தான், பல ஆண்டுகளாக கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் சமீபத்தில் பல பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்கள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பலூசிஸ்தானின் சுதந்திரத்தை நாடுகின்றன.
பாகிஸ்தான் அரசாங்கத்தால் தாங்கள் பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்கொள்வதாக பலூச் சிறுபான்மையினர் கூறுகின்றனர்.