சீனாவில் பரவி வரும் புதுவகை நிமோனியா காய்ச்சல்- விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் தற்போது குழந்தைகள் மத்தியில் அதிகமாக பரவிவரும், இன்ஃப்ளூயன்சா ப்ளூ மாதிரியான காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார அமைப்பு அந்நாட்டிடம் விளக்கம் கேட்டுள்ளது. சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளால், சீன மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ஆம் தேதி, தேசிய சுகாதார ஆணையம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், இது கொரோனா வைரஸ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதன் காரணம் எனவும் தெரிவித்ததாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2 (COVID-19 தொற்றை உருவாக்கும் வைரஸ்), குழந்தைகளைப் பாதிக்கும் RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா, உள்ளிட்ட அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் புழக்கத்தில் சமீபத்திய போக்குகள் பற்றிய கூடுதல் தகவல்களை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
புதுவகை நிமோனியா குறித்து இதுவரை அறிந்தது என்ன?
தொற்று நோய்கள் பற்றிய உலகளாவிய ஆய்வை நடத்தும் கண்காணிப்பு அமைப்பான, ப்ரோமேட்(ProMed), குழந்தைகள் மத்தியில் பரவி வரும் "கண்டறியப்படாத நிமோனியா" குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவுவதற்கு முன்பே, அது குறித்து எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தைவானை சேர்ந்த FTV செய்தி தொலைக்காட்சி, பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணங்களில், இம்ப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், மருத்துவமனைகளுக்கு படை எடுப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணங்கள், சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், இந்தத் தொற்று பரவலை குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள பரவலாக பார்க்க முடியாது.
காய்ச்சல் மற்றும் நுரையீரல் முடிச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்
இந்த வகை நிமோனியா குறித்து போதுமான தகவல்கள் வெளிவராத நிலையில், FTVயால் குறிப்பிடப்பட்டவர்கள், இந்த நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் மற்றும் இருமல் இல்லை எனவும், அதிக காய்ச்சல் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெரும்பாலும் பள்ளிகளில் இத்தொற்று பரவி வருவதால், அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், சில ஆசிரியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "இந்த பரவல் எப்போது தொடங்கியது என்பது தெளிவாக தெரியவில்லை, ஏனெனில் பல குழந்தைகள் இவ்வளவு விரைவாக பாதிக்கப்படுவது அசாதாரணமானது" என ப்ரோமேட்(ProMed) தெரிவித்துள்ளது. கடுமையான கோவிட் நடத்தை விதிமுறைகள் இல்லாமல், சீனா எதிர்கொள்ளும் முதல் குளிர்காலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.