ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்
ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய செஸ் வீராங்கனைக்கு அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சாரா காடெம் என்று அழைக்கப்படும் சரசதத் கதேமல்ஷாரி, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். ஈரானை சேர்ந்த அவர், தனது நாட்டின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை மீறி, ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றார். இது ஈரானில் உள்ள அடிப்படைவாத இஸ்லாமியர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை கைது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஹிஜாப் அணியாமல் விளையாடியதன் பின்னணி
22 வயதான ஈரானிய-குர்திஷ் சமூக இளம் பெண் மஹ்சா அமினியை ஹிஜாப் அணியாததற்காக, கடந்த ஆண்டின் செப்டம்பரில் அறநெறி காவல்துறை கைது செய்தது. காவல்துறையின் காவலில் இருந்தபோது மஹ்சா அமினி மர்மமான முறையில் உயிரிழந்தது நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியதோடு, ஈரானில் அமலில் உள்ள கட்டாய ஹிஜாப் அணியும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்தான், செஸ் வீராங்கனை சாரா காடெம் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். போராட்டத்திற்கு ஆதரவாக ஹிஜாப் அணியாமல் பங்கேற்றதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சாரா கூறியுள்ளார். இதையடுத்து, சிறப்பு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, செவ்வாயன்று (ஜூலை 25) ஸ்பெயின் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.