Page Loader
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 30, 2024
11:19 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், எச்சரிக்கையை மீறி போராட்டம் செய்த போராட்டக்காரர்களை திங்களன்று இடைநீக்கம் செய்யத் தொடங்கியது. ஏப்ரல் 18 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பித்தன. அப்போது, சுமார் 100 போராட்டக்காரர்கள் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மதிப்புமிக்க கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகள், மதியம் 2:00 மணிக்குள் (1800 GMT) போராட்ட முகாமை அகற்ற வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

அமெரிக்கா 

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நகர மாட்டோம்: மாணவர்கள் 

"34,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் இறப்புடன் ஒப்பிடும்போது பயமுறுத்தும் இது போன்ற தந்திரங்கள் எதுவும் எங்களிடம் வேலை செய்யாது" என்று இதற்கு மாணவர்கள் ஒரு அறிக்கை மூலம் பதிலளித்திருந்தனர். "கொலம்பியா எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அல்லது... வலுக்கட்டாயமாக நகர்த்தப்படும் வரை நாங்கள் நகர மாட்டோம்," என்று மாணவர்கள் கூறினர். இது நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, "பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடுத்த கட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை இடைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது." என்று கொலம்பியாவின் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவர் பென் சாங் கூறினார்.