Page Loader
சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்
சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் பகுதிகள் குறித்து முகமது யூனுஸ் சர்ச்சை பேச்சு

சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 31, 2025
07:35 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது நான்கு நாள் பெய்ஜிங் பயணத்தின் போது சீனாவை தாஜா செய்து முதலீட்டை ஈர்ப்பதற்காக பேசியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிலையான உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி குறித்த உயர்மட்ட வட்டமேசைக் கூட்டத்தில் உரையாற்றிய முகமது யூனுஸ், இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்திற்கும், நேபாளம் மற்றும் பூட்டானுக்கும் நுழைவாயிலாக பங்களாதேஷை சீனா பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார். பிராந்தியத்தில் கடலின் ஒரே பாதுகாவலராக பங்களாதேஷ் உள்ளதாக முகமது யூனுஸ் வலியுறுத்தினார். மேலும், சீனா பொருளாதார ரீதியாக காலூன்றவும், சுற்றியுள்ள நாடுகளுடன் இணைப்பைப் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார். அவரது கருத்துக்கள் இந்திய நிபுணர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளன.

பாதுகாப்பு கவலை

பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை

பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் இந்தச் சூழலில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தை அவர் பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தப் பகுதியில் சீனாவின் ஈடுபாடு குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகில், குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தில், அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி எனக் கூறிக்கொண்டு தனது இருப்பை சீனா அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவும் தனது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த அருணாச்சல எல்லைப்புற நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தியுள்ளது. ஷேக் ஹசீனா வெளியேற்றத்திற்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், முகமது யூனூஸின் சீனப்பயணம் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.