Page Loader
நேபாளத்தில் பயங்கர கனமழை, வெள்ளம் தொடர்வதால் 47 பேர் பலி

நேபாளத்தில் பயங்கர கனமழை, வெள்ளம் தொடர்வதால் 47 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jul 07, 2024
04:39 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளம் கடுமையான பருவமழை தொடர்பான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாளத்தில் 47 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. நேபாளத்தின் உள்துறை அமைச்சகம் கூறிய தகவலின்படி, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் ஆகியவை நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டமன்றக் கூட்டத்தின் போது, ​​தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் டோல் பிரசாத் ஆர்யல், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார். "தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 55 வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர். நிலச்சரிவுகளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

நேபாளம் 

பருவமழையால் நேபாளம் கடும் பாதிப்பு 

"மேலும், 46 வீடுகள் முழுமையாகவும் 36 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. மின்னல் 32 மாவட்டங்களை பாதித்துள்ளது, இதனால் 19 இறப்புகள் ஏற்பட்டுள்ளது, 35 பேர் காயம் அடைந்துள்ளனர்" என்று ஆர்யல் கூறியுள்ளார். வழக்கமாக நேபாளத்தில் பருவமழை ஜூன் 13 அன்று தொடங்கி செப்டம்பர் 23 அன்று முடிவடைகிறது. கடந்த ஆண்டு, வழக்கத்தை விட ஒரு நாள் தாமதமாக ஜூன் 14 அன்று இது தொடங்கியது. நேபாளம் அதன் நிலப்பரப்பு அமைப்பித்திருக்கும் நிலை, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் நிலச்சரிவுகள் ஏறபடக்கூடிய இடங்களில் மக்கள் குடியிருப்பது போன்றவை காரணமாக மழைக்காலங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.