ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்?
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், 2023 ஒருநாள் உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு ஓய்வெடுக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும். அவரது பதவிக்காலம் ஒருநாள் உலகக்கோப்பை முடிந்ததும் முடிவடைய உள்ளது. மேலும், இந்திய அணியுடனான டிராவிட்டின் ஒப்பந்தம் நவம்பர் 2023 உடன் முடிவடைய உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை லக்ஷ்மண் வழிநடத்த உள்ளார்.
இந்திய அணியின் அடுத்த முழுநேர பயிற்சியாளர்
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட்டின் இரண்டு ஆண்டு பயிற்சியாளர் பணி முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முன்னதாக, டி20 உலகக்கோப்பை 2021 முடிவடைந்த பிறகு ரவி சாஸ்திரியிடம் இருந்து அவர் பொறுப்பேற்றார். டிராவிட்டின் கீழ் இந்திய அணி 2023 ஆசியக் கோப்பையை வென்றது. மேலும், 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில், டிராவிட் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டினால், அவரது பதவியை நீட்டிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதேநேரம் அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால், டிராவிட் இல்லாத சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படும் விவிஎஸ் லக்ஷ்மண் முழுநேரமாக அந்த பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.