ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19வது சீசன் தொடங்க உள்ளது. இதில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் தேசிய கால்பந்து அணிகள் இடம்பெற அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கால்பந்து ரசிகர்களின் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்பதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்வீட்
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பது பின்வருமாறு:- இந்திய கால்பந்து பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! நமது ஆடவர் மற்றும் மகளிர் தேசிய கால்பந்து அணிகள் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தற்போதுள்ள அளவுகோலின்படி ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் தகுதி பெறாத நிலையில், இரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.