Sports Round Up : கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; ரோஹித் ஷர்மா சாதனை; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டாரில் மிட்செல் 130 ரன்களும் ராச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவின் விராட் கோலி அபாரமாக விளையாடி 95 ரன்கள் குவித்ததன் மூலம், 48 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் உலகக்கோப்பையில் சேஸ் செய்து வெற்றி பெறுவதில் நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்த இந்தியா
ஞாயிற்றுக்கிழமை தரம்ஷாலாவில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் 2015ஆம் ஆண்டு நியூசிலாந்து செய்த சாதனையை சமன் செய்தது. இந்தியா தனது 2023 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்ற நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிராகவும் வெற்றி பெற்றது. இவை அனைத்துமே இலக்கை சேஸ் செய்து பெற்ற வெற்றிகள் ஆகும். இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக அதிகமுறை சேஸ் செய்து வெற்றி பெற்ற நியூசிலாந்தின் சாதனையை சமன் செய்தது.
12 வருடங்களுக்கு மீண்டும் ஸ்டாக்ஹோம் ஓபன் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர்
ஞாயிற்றுக்கிழமை ஸ்வீடனில் நடந்த ஏடிபி 250 டென்னிஸ் போட்டியான ஸ்டாக்ஹோம் ஓபனை கேல் மான்ஃபில்ஸ் வென்றார். ரஷ்ய வீரர் பாவெல் கோடோவை எதிர்கொண்ட பிரெஞ்சு வீரர் கேல் மான்ஃபில்ஸ் இரண்டு மணி 37 நிமிடங்களில் 4-6, 7-6(6), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார். கேல் மான்ஃபில்ஸ் கடைசியாக ஸ்டாக்ஹோம் ஓபனை 2011இல் வென்றிருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் வென்றுள்ளார். இந்த இடைவெளி எந்தவொரு டென்னிஸ் வீரருக்கும் ஏடிபி டூர் வரலாற்றில் மிகப்பெரியதாகும். மேலும், ஸ்டாக்ஹோம் பட்டத்தை வென்ற வயதான வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள்; ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா
ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, தென்னாப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்த போட்டிக்கு முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தில் இருந்த ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் 4 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் 22 போட்டிகளில் 40 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னர் ஏபி டி வில்லியர்ஸ் 37 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ரோஹித் ஷர்மா அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் 49 சிக்சர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ள நிலையில், நடப்பு தொடரிலேயே ரோஹித் ஷர்மா அதையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவு; ரீஸ் டாப்லி விலகல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி, இடது ஆட்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர், ஒருநாள் உலகக்கோப்பையின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய கடைசி போட்டியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைக்காக வெளியே சென்றாலும் சிறிது நேரத்திலேயே மைதானத்திற்கு மீண்டும் வந்தார். போட்டியில் தொடர்ந்து அவர் பந்துவீசினாலும், இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. இந்நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 29 வயதான அவர், உலகக்கோப்பையில் மூன்று ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளுடன் இங்கிலாந்தின் சிறந்த பந்துவீச்சாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.