Sports RoundUp: கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; தொடர்ந்து 3வது பார்முலா-1 பட்டம் வென்ற மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 199 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கில் அடுத்தடுத்து 3 வீரர்கள் டக்கவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். எனினும், விராட் கோலி (85) மற்றும் கேஎல் ராகுல் (97 நாட் அவுட்) அணியை மீட்டெடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து 3வது பார்முலா-1 பட்டம் வென்ற மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்
கத்தார் கிராண்ட் பிரிக்ஸில் நடந்த ஸ்பிரிண்ட் பந்தயத்தில் மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், ரூக்கி ஆஸ்கார் பியாஸ்ட்ரிக்கு பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், இந்த சீசனுக்கான பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த சீசனில் 6 வெற்றிகளுடன் வெர்ஸ்ட்டப்பன் பட்டத்தை வென்றார். 2002 இல் மைக்கேல் ஷூமேக்கர் ஃபெராரிக்கு சாம்பியனாக இருந்த பிறகு இது மிகப்பெரிய வித்தியாசமாகும். மேலும், இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன் படைத்துள்ளார். இதற்கிடையே, கத்தார் கிராண்ட் பிரிக்ஸில் வென்ற ஆஸ்திரேலிய வீரரான 22 வயதே ஆன பியாஸ்ட்ரிக்கு இது ஒரு சிறந்த முதல் ஃபார்முலா ஒன் வெற்றியாகும்.
40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் டக்கவுட்
ஒருநாள் உலகக்கோப்பையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டக்கவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் டக்கவுட் ஆகினர். இதற்கு முன்பாக, 1983 ஒருநாள் உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி ஆகிய இருவரும் டக்கவுட் ஆனதே ஒருநாள் உலகக்கோப்பையில் கடைசியாக இருந்தது. இதற்கிடையே, உலகக்கோப்பையில் டக்கவுட் ஆன நான்காவது இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையையும் ரோஹித் ஷர்மா இதன்மூலம் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ரஷீத் கான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஒருநாள் உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் போட்டிக் கட்டணம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்ட தனி பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கோர நிலநடுக்கத்தை சந்தித்துள்ளது. முன்னதாக, 2022இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை மெட்ரோ ரயிலில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச பயணம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலவச பயண சேவை வழங்கியது. கிரிக்கெட் போட்டிக்காக இரவு 12 மணி வரை சேவையை நீட்டித்த மெட்ரோ ரயில் நிறுவனம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு போட்டிக்கான டிக்கெட்டை காட்டி இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும், இந்த சலுகை போட்டியைக் காண வரும்போது பயன்படுத்த முடியாது. இதற்கிடையே, தென்னக ரயில்வேயும் வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்களை இயக்கியது.