
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று 27 ஆண்டு ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது தென்னாப்பிரிக்கா
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இறுதியாக தங்கள் நீண்டகால ஐசிசி பட்ட வறட்சியை முறியடித்து, லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்த வெற்றி 27 ஆண்டுகளில் அவர்களின் முதல் ஐசிசி கோப்பையாகும். இதன் மூலம், 1999, 2003, 2015, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பல தசாப்தங்களாக இருந்த மனவேதனைகளை துடைத்தெறிந்தது.
மேலும் உலக அரங்கில் அவர்களை சோக்கர்ஸ் என்று நீண்ட காலமாக முத்திரை குத்திய விமர்சகர்களை மௌனமாக்கியது.
சோக்கர்ஸ் என்பது ஒரு அணி வலிமையாக இருந்தாலும், முக்கியமான தருணங்களில் சொதப்பிவிடுவதோ அல்லது வாய்ப்புகளை இழப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்களைக் குறிக்கும்.
போட்டி
போட்டி ஹைலைட்ஸ்
லார்ட்ஸில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கு சுருண்ட நிலையில், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து 282 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நான்காவது நாளில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா அணியில் ஐடென் மார்க்ரம் 136 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் அடைந்து 66 ரன்கள் எடுத்தார்.