LOADING...
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு

தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2025
04:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சாம்தோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது என்று ஸ்மிருதியின் மேலாளர் துஹின் மிஸ்ரா உறுதிப்படுத்தினார். உடனடியாக அவர் சங்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் ஸ்மிருதி மந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.

திருமணம்

திருமண நிகழ்வுகள் தள்ளிவைப்பு

தற்போது சீனிவாஸ் மந்தனாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத குடும்ப அவசரநிலை காரணமாக, இன்று நடக்கவிருந்த திருமணச் சடங்குகள் ரத்து செய்யப்படுவதாகத் திருமண நிர்வாகக் குழு அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்குத் தெரிவித்தது. சாம்தோலில் உள்ள திருமண ஏற்பாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. திருமண விழாக்கள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீனிவாஸ் மந்தனாவின் உடல்நிலை மற்றும் விரைவான குணமடைதலில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தம்பதியினரும் அவர்களது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.