பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதிநேர பயிற்சியாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு
பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபாவை பகுதி நேர பாரா தடகள பயிற்சியாளராக நியமித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பின்தங்கிய கிராமமான சொக்கத்தேவன் பட்டியில் பிறந்த மாற்றுத்திறனாளியான தீபா, இந்தியாவுக்காக பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளார். இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இவர் தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதையும் வென்றுள்ளார். விளையாட்டில் சாதித்தாலும், உரிய உதவி அரசிடமிருந்து கிடைக்காததால் தனியார் விடுதி ஒன்றில் சமையலராகப் பணியாற்றி வருவதாக கடந்த மாதம் செய்தி வெளியான நிலையில், தற்போது தமிழக அரசு பயிற்சியாளராக நியமித்துள்ளது.