உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) 2023 தடகள உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த தகுதிச் சுற்றில் முதல் முயற்சியிலேயே அதிகபட்சமாக 88.77 மீட்டர் தூரத்திற்கு எறிந்து, 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதியான 85.50ஐ தாண்டி நேரடியாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். இதற்கிடையில், இந்த இலக்கின் மூலம் அவர் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் உறுதி செய்தார். 2023 ஆம் ஆண்டில் நீரஜ் சோப்ரா தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். எனினும், தசைப்பிடிப்பால் கடந்த ஒரு மாதமாக ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா, உலக சாம்பியன்ஷிப்பில் தற்போது மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.