
INDvsSL :படுதோல்வி அடைந்தது இலங்கை; அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
ஒருநாள் உலகக்கோப்பையில் எந்தவொரு வீரரும் சதமடிக்காமல் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
இதற்கிடையே, இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசிய தில்ஷன் மதுசங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
India qualifies for Semi final in CWC 2023
55 ரன்களில் சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி
358 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, இன்னிங்சின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிசங்கவை இழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வந்தவேகத்தில் வெளியேற, இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. கசுன் ராஜித அதிகபட்சமாக 14 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இது இலங்கையின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் சமீபத்தில் செப்டெம்பரில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் 50 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தொடர்ந்து நான்காவது முறையாக தகுதி பெற்றுள்ளது.