
INDvsENG முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா; மழையால் இங்கிலாந்து பேட்டிங் தொடங்குவதில் தாமதம்
செய்தி முன்னோட்டம்
ஹெடிங்கிலியில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா முதல் நாளில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும், கே.எல்.ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சதம்
ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் சதம்
ஒன் டவுனாக களமிறங்கிய சாய் சுதர்சன் டக்கவுட் ஆனாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தினர். கில் 147 ரன்களும், பண்ட் 134 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி ஆட்டமிழந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்து வந்த வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். 430 ரன்களுக்கு நான்காவது விக்கெட்டை இழந்த இந்தியா, 471 ரன்களுக்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் டங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கவிருந்த நிலையில் மழையால் தாமதமாகி வருகிறது.