
INDvsENG முதல் டெஸ்ட்: மூன்று சதங்கள் அடித்தும் சோகமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
ஹெடிங்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சியூட்டும் சரிவை சந்தித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சதங்கள் இருந்தபோதிலும் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஒரு தனித்துவமான ஆனால் சோகமான சாதனையைப் பதிவு செய்தது. 430/3 என்ற நிலையில் இருந்த இந்தியா, கடைசி ஏழு விக்கெட்டுகளை வெறும் 41 ரன்களுக்கு இழந்தது. இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வீரர்கள் சதங்கள் அடித்த ஒரு அணியின் குறைந்த ஆல்-அவுட் என்ற சாதனையைப் படைத்தது. இந்த செயல்திறன் இப்போது துரதிர்ஷ்டவசமான பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
டாப் 4 இடங்கள்
மூன்று வீரர்கள் சதமடித்து குறைந்த ரன்களுடன் ஆல் அவுட் ஆன டாப் 4 இடங்கள்
இதில் தென்னாப்பிரிக்காவின் 475 (2016), ஆஸ்திரேலியாவின் 494 (1924), மற்றும் வெஸ்ட் இண்டீசின் 497 (2002) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டோங் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மறுபிரவேசத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 134 ரன்களையும் எடுத்தனர். ரிஷப் பண்டின் ஏழாவது டெஸ்ட் சதம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவருக்கு அளித்தது. முன்னதாக, முதல் நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.