INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் நாளில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக போட்டியின் முதல் நாள் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் சரிவை சந்தித்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் என தடுமாறியது. எனினும் ரவிச்சந்திரன் அஸ்வின் (113 ரன்கள்) சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 86 ரன்கள் மூலம், மீண்டு தங்கள் முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய வங்கதேசம், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
பந்துவீச்சில் அசத்திய ஆகாஷ் தீப்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது போட்டியில் களமிறங்கி விளையாடி வரும் இந்திய வீரர் ஆகாஷ் தீப் ஒன்பதாவது ஓவரின் முதல் பந்து மற்றும் இரண்டாவது பந்து என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். இந்த இரண்டு பந்துகளும் பேட்ஸ்மேனை தாண்டி ஸ்டம்பை பறக்கவிட்ட காட்சியை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ஆகாஷ் தீப்பை பாராட்டியுள்ளது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியைப் பொறுத்தவரை, இரண்டாம் நாளின் மூன்றாவது அமர்வில் தற்போதைய நிலவரப்படி, வங்கதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.