தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை
சீனாவின் ஹாங்சோவில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி தங்கத்தை வென்றுள்ளது. சீன தைபேயை எதிர்கொண்ட இந்திய அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 14-9 என முன்னிலை பெற்றாலும், இரண்டாவது பாதியில் மீண்டெழுந்த சீன தைபே ஒரு கட்டத்தில் இந்தியாவை விட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று 21-19 என முன்னிலை பெற்றது. எனினும், கடுமையாக போராடிய இந்தியா, இறுதியில் 26-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் இது இந்தியாவுக்கு 100வது பதக்கமாகும். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மூன்று இலக்கத்தில் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.