ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஆசியக் கோப்பை இரண்டாவது நிலை உலகத் தரவரிசைப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் செவ்வாய்கிழமை (மே 2) நடந்த ரிகர்வ் மற்றும் கூட்டுப் பிரிவுகளில் நான்கு குழுப் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். மிருணாள் சவுகான், துஷார் ஷெல்கே மற்றும் ஜெயந்தா தாலுக்தார் அடங்கிய இந்திய ஆடவர் ரிகர்வ் அணி 6-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. வெள்ளியன்று நடைபெறும் தங்கப் பதக்க மோதலில் இந்திய ஆடவர் ரிகர்வ் அணி சீனாவுடன் மோதுகிறது. இதேபோல் சங்கீதா, பிராச்சி சிங் மற்றும் தனிஷா வர்மா அடங்கிய இந்திய மகளிர் ரிகர்வ் மகளிர் அணி அரையிறுதியில் 6-0 என்ற கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. இதையடுத்து இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
கூட்டு ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அபிஷேக் வர்மா, குஷால் தலால் மற்றும் அமித் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் கூட்டு அணி 236-221 என்ற புள்ளிக்கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெள்ளியன்று தங்கப் பதக்கப் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதே போல் பர்னீத் கவுர், பிரகதி மற்றும் ராகினி மார்கூ ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டு மகளிர் அணி தகுதிச் சுற்றில் முதலிடம் பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. அவர்களும் தங்கப் பதக்க மோதலில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவுக்கு கடும் போட்டியை கொடுக்கக் கூடிய தென்கொரிய வீரர்கள் யாரும் இதில் பங்கேற்காததால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.