
செங்கடலில் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் சேதம்: உலகளாவிய இன்டர்நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் சேவை பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
செங்கடலில் உள்ள பல கடலுக்கடியில் செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதனால், உலகளாவிய இன்டர்நெட் டிராஃபிக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்ற கிளவுட் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே தரவுப் பரிமாற்றத்திற்கான வேகத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இந்த சேவைத் தடை குறித்து மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட அறிக்கையில், "கடலுக்கடியில் உள்ள கேபிள்களைச் சரிசெய்ய நீண்ட காலம் ஆகலாம். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், இணையப் போக்குவரத்தை மாற்று வழிகளில் திருப்பிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இயல்பு நிலை
சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?
முழு சேவையும் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்வரை தினசரி அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. செங்கடல், உலக இன்டர்நெட் இணைப்பிற்கான ஒரு முக்கிய மையமாக உள்ளது. உலகின் சுமார் 17% இன்டர்நெட் டிராஃபிக், அதன் ஆழமற்ற கடல்பகுதிகளில் உள்ள கேபிள்கள் வழியாகவே செல்கிறது. இந்தச் சேதமடைந்த கேபிள்களில் SEACOM/TGN-EA, AAE-1 மற்றும் EIG போன்ற முக்கிய அமைப்புகளும் அடங்கும். இந்தச் சேதத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த காலங்களில், வர்த்தகக் கப்பல்கள் வீசும் நங்கூரங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அப்பகுதிகளில் நிலவி வரும் மோதல்களால், முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.