பிரஞ்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ
ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது சந்திரயான் 3. வெற்றிகரமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து, தங்களிடம் உள்ள அறிவியல் உபகரணங்களைக் கொண்டு நிலவின் மேற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும். நிலவில் லேண்டர் மற்றும் ரோவரின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறது இஸ்ரோ. இந்நிலையில், தற்போது நிலவின் மேற்பரப்பில் சுற்றிவந்து கொண்டிருக்கும் பிரஞ்யான் ரோவர் படம்பிடித்திருக்கும் விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை எக்ஸில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ. ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேஷன் கேமராவைக் கொண்டு லேண்டரைப் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேவிகேஷன் கேமராவையும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் Laboratory for Electro-Optics Systems மையத்திலேயே உருவாக்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.