அடுத்த வாரம் நத்திங் போன்(1) பயனர்களுக்கு வெளியாகிறது 'நத்திங் OS 2.0'
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய முதல் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன்(1)'-ஐ வெளியிட்டது, முன்னாள் ஒன்பிளஸ் சிஇஓ கார்ல் பெய் தலைமையிலான புதிய நத்திங் நிறுவனம். ரூ.33,000 அடிப்படை விலையில் ஒரு மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக, மிட்ரேஞ்சு ப்ராசஸரோடு போன்(1)-ஐ வெளியிட்டிருந்தது நத்திங். முதல் போனில், சாஃப்ட்வேரை விட ஹார்டுவேருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்தது நத்திங். எனவே, போன்(1)ன் சாஃப்ட்வேரானது மிகவும் அடிப்படையான வசதிகளை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால், ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பது வரவேற்கத்தக்க விஷயம். போன்(1)ஐ வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டு கழித்து, கடந்த ஜூலை மாதம் தங்களுடைய இரண்டாவது போனான, 'நத்திங் போன்(2)'வை வெளியிட்டது நத்திங். இந்த ஸ்மார்ட்போனில் தங்களுடைய புதிய இயங்குதளமான, 'நத்திங் OS 2.0'வையும் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம்.
போன்(2)வில் சாஃப்ட்வேருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த நத்திங்:
போன்(1)ல் ஹார்டுவேருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையில், போன்(2)வில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை உயர்த்த சாஃப்ட்வேருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்தது அந்நிறுவனம். அதேபோல், அந்நிறுவனம் போன்(2)வில் அறிமுகப்படுத்திய நத்திங் OS 2.0வானது, அந்நிறுவனம் கூறியது போலவே சிறந்த பயனர் அனுபவத்தைக் கொடுத்ததோடு, பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருந்தது நத்திங். போன்(2)வைத் தொடர்ந்து, தற்போது போன்(1)க்கும் நத்திங் OS 2.0வினை வெளியிடவிருக்கிறது நத்திங். போன்(1)க்கான, நத்திங் OS 2.0வின் உட்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அனைத்துப் போன்(1) பயனர்களுக்கும் புதிய இயங்குதளத்தை வெளியிடவிருப்பதாகவும் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர் நத்திங்கும், அதன் சிஇஓ கார்ல் பெய்யும்.