LOADING...
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி
இஸ்ரோவின் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி

ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2025
03:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்திற்காக ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல்கல்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எட்டியுள்ளது. குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த வான்வழி டிராப் சோதனை (IADT-01) ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனையானது, இந்திய விமானப்படையின் உதவியுடன், ஒரு போலி குழு தொகுதி (Crew Module) விமானத்திலிருந்து கீழே விடப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, பல-நிலை கொண்ட பாராசூட் அமைப்பு மூலம் மெதுவாக தரையிறக்கப்பட்டது. ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், பாராசூட் அமைப்பு எதிர்பார்த்தபடி செயல்பட்டு, போலி தொகுதி பாதுகாப்பாக தரையிறங்கியது.

பாதுகாப்பு

விண்கலத்தின் பாதுகாப்பு

பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, விண்வெளி வீரர்களை அதிக தாக்கத்திலிருந்து பாதுகாப்பதே இந்தப் பாராசூட் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். பாராசூட் வரிசையாக வெளிப்படும் செயல்முறையின் முழு செயல்பாட்டையும் சோதிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்ட IADT-01 சோதனை, ககன்யான் திட்டத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு வடிவமைப்பில் நம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. ஆளில்லா முதல் சோதனைப் பயணம் டிசம்பர் 2025இல் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட குழுவை 400 கி.மீ. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லும் முதல் மனித விண்வெளிப் பயணம் 2028இல் எதிர்பார்க்கப்படுகிறது.