இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்
ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர், வோல்கர் விஸ்ஸிங் பெங்களூருவில் உள்ள சாலையோரக் காய்கறிக் கடை ஒன்றில் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தக் காணொளியை இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகமே, தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் நடைபெற்ற G20 டிஜிட்டல் அமைச்சர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காகவே இந்தியா வந்திருந்தார் ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங். அப்போது தான், இந்தியாவில் வேகமான பணப்பரிவர்த்தனை சேவையான, யுபிஐ சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார் அவர்.
யுபிஐ பற்றி ஜெர்மன் தூதரகம் பதிவிட்ட கருத்து:
ஜெர்மன் அமைச்சர் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் புகைப்படம் மற்றும் காணொளியைப் பகிர்ந்திருக்கும் ஜெர்மன் தூதரகம், இந்தியாவின் யுபிஐ சேவை குறித்த தங்களது கருத்தையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அந்தப் பதிவில், "இந்தியாவில் வெற்றிக் கதைகளுள் ஒன்று இந்நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பு. யுபிஐ சேவையின் மூலம், நொடிகளில் அனைவராலும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிகிறது. இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஜெர்மன் டிஜிட்டல் அமைச்சர் விஸ்ஸிங்கும் இந்தியாவின் யுபிஐ பயன்படுத்தி, அதன் எளிமையான பயன்பாட்டு அனுபவத்தால் கவரப்பட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். இலங்கை, பிரான்ஸ், யுஏஇ மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ சேவையை தங்கள் நாட்டிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.