முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு
அக்டோபர் 28, 2021ல் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் எனப்படும் பெரும் சூரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, அதன் தாக்கம் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் என அனைத்து இடங்களிலும் உணரப்பட்டது கண்டறியப்பட்டது. பெரும்பாலும் இது போன்ற சூரிய வெடிப்புகளில் இருந்து பூமியின் காந்தப்புலமானது தடுத்துவிடும். ஒரு சில அதிசக்திவாய்ந்த சூரிய வெடிப்புகளில் மூலம் சூரியனில் இருந்து வெளியாகும் துகள்கள் மட்டுமே, பூமியின் காந்தப்புலம் மற்றும் வலிமண்டலத்தைக் கடந்து பூமியின் மேற்பரப்பை அடையும். 2021-ல் ஏற்பட்ட சூரிய வெடிப்பானது அப்படியான ஒரு சக்திவாய்ந்த சூரிய வெடிப்பாகவே கருதப்பட்டிருக்கிறது. இந்த சூரிய வெடிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒன்று Gephysical Research Letters என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அனைத்து இடங்களிலும் உணரப்பட்ட சூரிய வெடிப்பு:
தற்போதைய நிலையில், பூமியைச் சுற்றியிருக்கும் சந்திரன் மற்றும் செவ்வாய் என முக்கிய விண்வெளிப் பொருட்களையும், தங்களுடைய ஆய்வு கலன்களைக் கொண்டு பல்வேறு உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வுக் கலன்களில் இருக்கும் கருவிகள் மூலம் சந்திரன் மற்றும் செவ்வாயின் சுற்றுப்புறத்திலும், மேற்பரப்பிலும் மேற்கூறிய சூரிய வெடிப்பானது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதனை கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் மூலம் தங்களுக்கென காந்தப்புலமும், வளிமண்டலமும் இல்லாத நிலவு மற்றும் செவ்வாயில் இந்த சூரிய வெடிப்புகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிந்து கொள்வது, அடுத்து வரும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களில் மிகவும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.