ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று உலக ரத்ததானம் செய்பவர்கள் தினம். இந்நாளில், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இரண்டு வருடங்களாக 21,000 கிமீ நடந்துகொண்டிருக்கும் ஒரு டெல்லி நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். டெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா என்ற சமூக சேவகர் ஒருவர், இந்தியா முழுவதும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இரண்டு வருடங்களுக்கு முன்னர் 21,000 கிமீ நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். கிரண் வர்மா, இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் தேடுபவர்கள் இருவருக்கும் உதவ, 'சிம்ப்ளி ப்ளட்'(simply blood) என்ற இரத்த தான இணையதளத்தை தொடங்கினார். இந்த இணையதளம் மூலமாக இன்றுவரை, 35,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 12 மாநிலங்கள் தாண்டி நடக்கும் கிரண்
ஒருமுறை, கிரண் ரத்ததானம் செய்ய சென்றபோது, தன்னுடைய ரத்தம் ஒரு ஏழையின் உயிரை காப்பாற்ற ரூ.1500 க்கு விற்கப்பட்டதை அறிந்தார். அந்த ஏழையின் மனைவி, அந்த பணத்தை காட்டுவதற்காகவும், தன் கணவரின் மருத்துவ செலவை கவனித்துக்கொள்ளவும் விபச்சார தொழிலுக்கு சென்றதையும் அறிந்தார் கிரண். இதனை தொடர்ந்து தான், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என இந்த நடை பயணத்தை துவங்கியுள்ளார் கிரண். சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்றொதொரு நடை பயணம் மேற்கொண்டார் கிரண். ஆனால் அவரால் இலக்கை அடையமுடியவில்லை. தற்போது மீண்டும் ஒரு இலக்கை குறி வைத்து, தனது விழிப்புணர்வு நடை பயணத்தை செய்து வருகிறார்.